சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம்
நடைபெறுகின்ற நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
குறித்த கூட்டத்திற்கு தமக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதேச சபையின் உறுப்பினர்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
தாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்றும், சமூகமட்ட அமைப்புக்களுக்கு வழங்குகின்ற
அனுமதி தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு
குழப்ப நிலை ஏற்பட்டது.
திருட்டுத்தனமாக சென்ற எம்.பி
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான நாடாளுமன்ற
உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா வேறொரு வாகனத்தில் திருட்டுத்தனமாக உள்ளே
சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் ஆளும் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின்
செயற்பாட்டாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில்
தமக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரம் கூட்டத்தில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்பட்ட நிலையில் கூட்டம் ஆரம்பமாகியது.

