அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிசுவின் சடலம் நேற்று (09.09.2024) இரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் தோட்ட மக்கள் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, கறுப்பு பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எனினும், சிசுவின் தாய் தொடர்பிலும், மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.
அதேவேளை, தற்போது 28 வயதுடைய குறித்த முச்சக்கரவண்டியின் சாரதியை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் (10) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் பார்வையிட்டதன் பின்னர், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.