டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது.
இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளது.
நன்கொடை முயற்சி
அந்த அறிக்கையில்,
புயலால் பாதிக்கப்பட்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை மக்களுடன் சீன மக்களும் பங்கெடுத்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நிச்சயமாக இந்த அனர்த்தத்தில் இருந்து விரைவில் மீள்வார்கள் என நம்பிக்கை கொள்வதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீனர்கள் சங்கம் ஆகியவை நன்கொடை முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.
இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக மொத்தமாக 10 மில்லியன் ரூபாவை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

