முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி (Deshabandu Tennakoon), முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு (Sagala Ratnayaka) சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை (Matara) மொரவக்க பகுதியில் உள்ள சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் நேற்று (11) சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, “குறித்த வீட்டைப் பரிசோதிக்க தம்மிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
அத்துடன் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது.
எனினும் அவர் இதுவரையில் தொடர்ந்து தேடப்படுவதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.