கந்தளாய் – போட்டாங் காட்டுப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஐந்து
ஏக்கர் நெற்பயிர்கள் மீது அடையாளம் தெரியாதோரால் “ரவுண்டப்” களைகொல்லி விஷம்
தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும், விவசாயத்
திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இந்த வயல்
நிலத்தை, தற்போதைய சிறுபோக நெற்செய்கைக்காக விவசாயி ஒருவர் குத்தகைக்கு
எடுத்துப் பயிர்செய்து வந்த நிலையிலேயே இந்த நாசகாரச் செயல் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயியின் கருத்து
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில்,
“தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தானத்திற்குரிய இந்த வயல், கடந்த காலங்களில்
கோவிலுக்குத் தொண்டாற்றும் அடியார்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. நான் இம்முறை
சிறுபோகத்திற்காக இதை குத்தகைக்கு எடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில்
நெற்செய்கையில் ஈடுபட்டேன்.
தற்போது பயிர்கள் செழித்து வளர்ந்து, கதிர் வந்து அறுவடையை
எதிர்பார்த்திருந்தேன். இந்த நிலையில், எனது உழைப்பை அழிக்கும் கொடூர
நோக்குடன் அடையாளம் தெரியாத நபர்கள் வயல் வரம்பு நீட்டுக்கும் விஷத்தைத்
தெளித்துள்ளனர். இதனால் கதிர்கள் கருகி, எனது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி
உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடு பதிவு
அத்துடன் தனக்கு ஏற்பட்ட பெரும் நட்டம் குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும், விவசாய
அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





