முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட
நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி
முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இதனை சீர்செய்யும் நடவடிக்கையில் படையினர்
மக்கள் பொதுமக்கள் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இந்த நிலையில் முத்தையன்கட்டு குளத்தின் வான்பாயும் பகுதி முற்றாக
சேதமடைந்துள்ளதை சில சுயாதீன ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
முத்தரையர்-சோழர் காலம்
இந்தச் சேதங்கள் ஒரு நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு
ஏற்பட்ட இழப்பாக மட்டும் அமையாமல், மன்னர் காலத்து முத்தரையர்-சோழர் காலம் பண்டைய வரலாற்றுக் கட்டமைப்புகளை மீண்டும் வெளிக்கொண்டுவரும் அரியதொரு
வாய்ப்பாக மாறியுள்ளது.

சேதத்தில் வெளிப்பட்ட அதிசயப் பொக்கிஷம்
பழைய கட்டுமானங்கள் குளத்தின் கீழ் கட்டுமானப் பகுதிகள் சேதமடைந்ததால்,
பழங்காலக் கட்டிட அமைப்புகளின் எச்சங்கள் தற்போது நிலமட்டத்திற்கு மேலே
தெளிவாகக் காட்சியளிக்கின்றன.
இது, குளத்தின் வரலாறு மற்றும் அதனைச்
சுற்றியிருந்த நாகரிகம் குறித்த புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியுள்ளது.
வெளித்தெரியும் இந்தச் சிதைவுகளுக்கு மத்தியில், பண்டைய
புதையல் அல்லது தொல்லியல் எச்சங்களைக் காணக்கூடியதாக இருப்பது, அப்பகுதி ஒரு
காலத்தில் செழிப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம்
என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
வரலாற்றுத் தொடர்பு
ஆய்வுகளின்படி, முத்தையன்கட்டு குளம் சோழர் ஆட்சிக்
காலத்தில் முத்தரையர் என்ற இனக் குழுவினரால் கட்டப்பட்டிருக்கலாம் எனக்
கருதப்படுகிறது. இந்தச் சிதைவுகள் அந்த வரலாற்றுத் தொடர்பை
உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான கள ஆதாரங்களாக அமைகின்றன.

இந்நிலையில் இவ்வாறு செய்திகள் வெளிவந்துள்ள பின்னணியில் குறித்த தகவல் தொல்பொருள்
திணைக்களத்தின் பார்வைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இதன்படி குறித்த பகுதிக்கு சென்ற தொல்பொருள்திணைக்கள அதிகாரிகள் அந்த
தொல்பொருள் சின்னத்தினை சுற்றி அடையாளப்படுத்தி தொல்பொருள் மரபு தொடர்பில் தெரிவித்து இதில் எந்த பணியும் மேற்கொள்ளவேண்டாம், அதற்கான உரிய கடிதம் எழுத்துமூலம் வரும் என நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கு
தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

