காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennekoon) அவரது பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாடாளுமன்றம் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இன்றைய (23.07.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே ஜகத் விக்ரமரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படல்
அத்துடன் நிலைக்குழுவின்படி காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம், இன்று வருகைதராத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கணக்கிட்டு, தெளிவான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானம் ஐந்து நாட்களுக்கு உத்தரவுப் பத்திரத்தில் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தென்னகோன் குற்றவாளி என கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் நேற்று (22) சபையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.