தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு மீதான விவாதத்தை நடத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாமல் ராஜபக்ச, இன்று (05.08.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாமல், நிலையியற் கட்டளை 98Fஇன் கீழ், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
தேசபந்து தொடர்பான வழக்குகள்
“இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 09 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற வழக்கின் முடிவு நாடாளுமன்ற விவாதத்தால் பாதிக்கப்படாது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பின்னர் விவாதத்தைத் தொடங்குங்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தொடர்புடைய விதிகளை ஆராய்ந்த பின்னர், நாடாளுமன்ற விவாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் இன்று பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்த போது, சபாநாயகர் தான் ஒரு பதிலை அளித்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினரை தனது உரையை முடிக்க உத்தரவிட்டதாகவும் கூறினார்.

