தென்மராட்சி- மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம்
செப்டெம்பர் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிக
அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டுவிலில் அமைந்துள்ள கைத்தொழில் நிலையத்தினை இன்று காலை பார்வையிட்ட
அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட
செயலகத்தில் அதனை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த அரசாங்கம் பல தடவைகள் ஆரம்பிப்பதாக தெரிவித்த மட்டுவில் பொருளாதாரம் மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடக சந்திப்பு
மேலும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் பொருளாதார மத்திய நிலையத்தில் காணப்படும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைத்தல் தொடர்பாகவும் முல்லைத்தீவில் இராணுவத்தினால் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படும் விடயம் தொடர்பாகவும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாகவும் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது.
இதன் போது, வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம்
மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாநகர சபை ஆணையாளர், அமைச்சின் அதிகாரிகள்
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.