பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கையெழுத்திட்டு கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் தெளிவாக அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பாடசாலை நேரத்தினை பிற்பகல் 2மணி வரையில் நீடிப்பதற்கு எவ்விதமான எதிர்ப்புக்களும் இல்லையென்று அறிவித்ததை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எந்தவொரு ஆய்வு அடிப்படையுமின்றி, தேசிய கல்வி நிறுவகத்தின் பெயரால் கல்வி அமைச்சர் இந்த முடிவைத் தன்னிச்சையாக வெளியிடுகிறார். இந்த முடிவில் எந்த நடைமுறைத் தன்மையும் இல்லை.
தொழிற்சங்க நடவடிக்கை
அத்துடன், எமது கோரிக்கைக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் உரிய பதில் அளிக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலுள்ள அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்” என தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

