கடந்த 24 மணி நேரத்தில், கண்டி – உடதும்பர பகுதியில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்திற்குள் கண்டி – உடதும்பர பகுதியில் 308 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும், உடதும்பர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள போப்பிட்டிய பகுதியில் 234 மி.மீட்டரும், நுகதென்ன பகுதியில் 221 மி.மீட்டரும், கைகாவல பகுதியில் 218 மி.மீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், இந்த பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதோடு, முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

