மலேசியா காவல்துறையினரே கே. பியை கைது செய்தனர் எனவும் இலங்கைக்கு கொண்டு வரப்படும் வரை அவர் கே.பி. என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ கே.பியை வீட்டுக்கு வரவழைத்தே கலந்துரையாடினார்.
எனவே அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது
என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்பு கூறவேண்டும் எனவும் பொன்சேகா
குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “கே.பியை மலேசிய காவல்துறையினரே கைது செய்தனர். அதுபற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார்.
குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து
எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அக்குழுவுடன்
மலேசியாவில் இருந்தும் குழுவொன்றும் வந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே கைது
செய்யப்பட்டவர் கே.பி. என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர் எனவும்
பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பியை வீட்டுக்கு
அழைத்தார். தனியாக பேச்சு நடத்தினார்.
அப்போது கே.பி. வசம் தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்
துக்கு பின்னர் கே.பி. விடுவிக்கப்பட்டார்.
அப்போது நான் இராணுவத்தில் இருக்கவில்லை. கே.பி. வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது அவை அரசுடமையாக்கப்படவில்லை.
கே.பி உடன் ராஜபக்சக்கள் தான் கலந்துரையாடினார்கள். என்ன
நடந்தது என்பது அவர்களுக்கு தான் தெரியும். எனவே இதற்கு பொறுப்புகூறவேண்டும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

