இறந்த மற்றும் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் பெற்றோருக்கான நலன்புரி
கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண
ஜயசேகர இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தடையில்லாமல் வழங்கப்படும் கொடுப்பனவு
ரணவிரு செவன அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் இந்தக் கொடுப்பனவு
தடையில்லாமல் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதியுள்ள பெற்றோர் ஒருவருக்கு மாதந்தோறும் 750 ரூபா கொடுப்பனவு
வழங்கப்படுகிறது.
எனினும், பயனாளிகள் வருடத்திற்கு இருமுறை சமர்ப்பிக்க வேண்டிய தாங்கள்
உயிருடன் இருப்பதை உறுதிசெய்யும் சான்றிதழை வழங்கத் தவறினால் மட்டுமே
கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்படக்கூடும் என்று அவர் விளக்கினார்.

சான்றிதழ் சமர்ப்பிப்பு
மொத்தமுள்ள 32,867 தகுதியுள்ள பயனாளிகளில், ஆண்டின் இரண்டாம் பாதிக்கு (ஜூலை
முதல்) இதுவரை 4,727 சான்றிதழ்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய பயனாளிகள் தங்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் அவர்களின்
கொடுப்பனவுகளைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

