கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (16) மாலை 5.00 மணியளவில் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க எதிர்பார்ப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் செக்கனுக்கு 500 கன அடி நீரை கவுடுல்ல ஓயாவிற்கு விடுவிக்க எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ள நிலைமை
இதன் காரணமாக வெள்ள நிலைமை ஏற்படாது என்றாலும், தாழ்நிலப் பகுதிகளைப் பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

