யாழ்ப்பாணம், வயாவிளானில் உள்ள தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும்
இராணுவ வைத்தியசாலைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வயாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால்
கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் இராணுவ
வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையின் கட்டட வேலை
காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.
சிவஞானம் மற்றும் வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி
உரிமையாளருடன் காணி அமைந்துள்ள பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நேரில்
சென்று, உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று, வைத்தியசாலையின் கட்டட
வேலைகளை அவதானித்தனர்.
காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ.சுமந்திரன், இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்படும் வைத்தியசாலைக் கட்டுமானத்துக்கு எதிராக மிக விரைவில் சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

