சர்வதேச நாணய நிதியம் தனது பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் இலங்கையின்
தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ளது.
இது, ஆழமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ள நாட்டின், வலுவான
வளர்ச்சி வேகத்தை எடுத்துக்காட்டுவதாக அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியான முன்னேற்றம்
அண்மைய பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு செய்தியாளர்
சந்திப்பில், நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர்
கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் மற்றும் பிரதி பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்ளிங் ஆகியோர் இந்த
கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார செயல்திறன் மற்றும் முக்கிய கொள்கை முன்னுரிமைகள்
குறித்த புதுப்பிப்பை அவர்கள் இதன்போது வழங்கினர்.
மாநாட்டில் பேசிய தோமஸ் ஹெல்ப்ளிங், நெருக்கடியின் போது கடுமையான மந்தநிலையை
அனுபவித்த பிறகு, இலங்கை இப்போது IMF ஆதரவுடன் பலன்களைப் பெற்று வருகிறது
என்று கூறியுள்ளார்.
பொருளாதார ஆதாயங்களைத் தக்கவைக்க இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து
செயல்படுத்துவது மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையைப் பொறுத்தவரை, நிலைப்படுத்தல் பாதையில் தொடர்ந்து
செல்வது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட கால வெற்றிக்கு,பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதும், நிறுவன
கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் அவசியம் என்றும் ஹெல்ப்ளிங்
வலியுறுத்தியுள்ளார்.
பாராட்டிய IMF
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிதி நம்பகத்தன்மையை உறுதி செய்வதும்,
நிதி அபாயங்களைக் குறைப்பதும் இந்த நன்மைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மிக
முக்கியமானதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இலங்கை
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று கிருஷ்ணா ஸ்ரீனிவாசன்
குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நாடு ஏற்கனவே கடினமான பங்கைச் செய்துள்ளது
அத்துடன், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் மூலம், தொடர்ந்து நன்மைகளைப் பெற
முடியும் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
மின்சார விலை நிர்ணயம் மற்றும் செலவு மீட்பு குறித்து, திட்டத்தின் கீழ்
கட்டமைப்பு அளவுகோல்களின் ஒரு பகுதியாக சீர்திருத்தங்கள் தொடர்கின்றன.
நிதி ஒழுக்கத்தை மீட்டெடுப்பது மற்றும் பராமரிப்பது, அத்துடன் அரசுக்கு
சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்துவது ஆகியவை முன்னோக்கிச் செல்லும்
முக்கியமான படிகள் என்று அவர் விளக்கினார்.
சாத்தியமான விலை சரிசெய்தல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், அத்தகைய
முடிவுகள் காலநிலை நிலைமைகள் மற்றும் சர்வதேச எரிசக்தி விலைகள் உட்பட பல
காரணிகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், தனிப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து தாம் கருத்து தெரிவிக்க
முடியாது,
ஆனால் இதுவரை, இலங்கை அரசாங்கம் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை வலுவாக
ஆதரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.