வக்பு சபை சட்ட திருத்த யோசனை இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நள்ளிரவு
நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் தமது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளன
வக்பு சபைக்கு சொந்தமாக பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்த பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும்
வருமானம், மசூதி பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட
பணிகளுக்கு செலவிடப்படுகிறது.
வக்பு சட்டம்
முன்னதாக இந்த சொத்துகளை முறைப்படுத்த கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம்
கொண்டுவரப்பட்டது.
பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் 1995 ஆம் ஆண்டு புதிய வக்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதாக்கட்சி
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம், வக்பு சபையின் சொத்துகளின்
வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, 1995 ஆம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு
திருத்தங்களை செய்து யோசனையை தயாரித்தது.
இந்த திருத்த யோசனை, கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவை
எனினும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், யோசனை நாடாளுமன்ற கூட்டுக்குழு
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இதன்போது குறித்த யோசனையில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய
அமைச்சரவை, அண்மையில் அதற்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து 12 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர் விவாதம் நடைபெற்ற நிலையில்,
யோசனை மீது இன்று அதிகாலை 2 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது யோசனைக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.
லோக்சபா என்ற மக்களவையில் இந்த யோசனை நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் இந்த
சட்ட திருத்த யோசனை இனி தாக்கல் செய்யப்பட உள்ளது.