நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை
பெய்து வருகின்றது.
எனினும் அங்கு பல்வேறு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன்
சீரற்ற இணைய சேவைகள் காரணமாக வெளி உறவுகளின் நலன்களை அறிந்து கொள்வதில்
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மின் தடை
மேலும் மின்சாரம் இன்மை காரணமாக கடைகளில் மின்பிறப்பாக்கி ஊடாக மின்சாரம்
தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு மணித்தியாலத்திற்கு 100 வீதம்
தொலைபேசிகள் சார்ஜ் செய்து கொடுக்கப்படும் அவல நிலையும் தொடர்ந்து வருகின்றது.
அதிக மின்வலு கொண்ட மின்கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இவ்வாறு
மாவட்டம் முழுவதும் மின்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை
தெரிவித்துள்ளது.

குடிநீர் பற்றாக்குறை
இதனால் குடிநீர் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு இணைய
சேவைகள் முடக்கம் என்பன கடந்த 3 தினங்களாக ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி
முறையில் சில இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த
வண்ணம் உள்ளதுடன் இலங்கை மின்சார சபையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுழற்சி முறையில் மின்சாரம்
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று,
அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது,
பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற
பிரதேசங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் இன்மை காரணமாக இந்நிலைமை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




