சிரியாவில் இராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
துப்பாக்கி சூடு
இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள இராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் உள்ளிட்ட 3 அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை ஏனைய அமெரிக்க இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,
“சிரிய அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும்.
இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா – அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது” என கூறியுள்ளார்.

