யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால்
வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் சென்றதை அவதானிக்க
முடிந்தது.
இச்சம்பவம் இன்று (23) காலை 10.15 மணியளவில் மானிப்பாய் பகுதியில்
இடம்பெற்றது.
கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும்,
காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமே இவ்வாறு ஓட்டப்
போட்டியில் ஈடுபட்டு மக்களை கதிகலங்க வைத்தன.
தாறுமாறாக செலுத்தப்பட்ட பேருந்து
மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆரம்பித்த போட்டி ஆறுகால் மடம்வரை தொடர்ந்தது.
இதில் கீரிமலை – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சாரதி சமிக்ஞை விளக்கினை
உரியமுறையில் ஒளிரவிட்டு பேருந்தினை செலுத்தியபோதும் காரைநகர் – யாழ் பேருந்து
சாரதி சமிக்ஞை விளக்கினை உரியமுறையில் ஒளிரவிடாது தாறுமாறாக பேருந்தினை
செலுத்தியதனை அவதானிக்கமுடிந்தது.
கீரிமலை பேருந்தினை முந்துவதற்கு பலமுறை முயற்சித்த காரைநகர் பேருந்து சாரதி
ஆறுகால் மடத்திற்கு பின்பு மெதுவாக சென்றது. இதனால் பலரை தனியார் பேருந்துகள்
ஏற்றாது சென்றதையும் அவதானிக்க முடிந்தது.