Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்த தனது திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டவுடன், ஜப்பான் உடனடியாக மீள ஆரம்பிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி( Misukoshi Hideki) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(28.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை அறிவித்துள்ளார்.
புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
இருதரப்பு கடனளிப்பாளர்களுடன்; கைச்சாத்திடப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்காக தூதுவர் மிசுகோசி ஹிடேகி, இலங்கைக்கு பாராட்டுக்களை கூறியுள்ளார்.
இந்தநிலையில் முன்னர் இடையில் நிறுத்தப்பட்ட தமது நிதியீட்டிலான திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், அந்த திட்டங்களை ஜப்பான் உடனடியாக மீள ஆரம்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் ஏற்கனவே இலகு தொடருந்து மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய விஸ்தரிப்பு போன்ற திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
எனினும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் மற்றும் வங்குரோத்து நிலையை இலங்கை அறிவித்தமையை அடுத்து அந்த திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.