இளைஞரொருவரிடம் இலட்சக்கணக்கான ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த இளைஞனிடம் ருமேனியாவில் (Romania) வேலை வாங்கித் தருவதாகக் கூறி 945,000 ரூபாய் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ருமேனியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை வாங்கித் தருவதாக கூறி, 2023 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் தன்னை ஏமாற்றி வருவதாக பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேற்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ளதோடு, கைது செய்யப்படும் போது சந்தேகநபர் அந்த நிறுவனத்தின் கணினிப் பிரிவில் உதவி முகாமையாளராக பணிபுரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இன்று (13) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.