இந்தியா : கிருஷ்ணகிரியில் (Krishnagiri) பாடசாலை மாணவர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் – மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13) நேற்று (02.07.2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர்
இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், பெற்றோர் அளித்த முறைப்பாடு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி – ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் சடலம்
சிறுவனின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சிறுவனின் நண்பர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காரில் வந்த மர்ம நபர்கள் யார்? சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Source: https://ibctamil.com/article/krishnagiri-13-year-old-boy-kidnapped-and-murdered-1751551321

