கண்டி, பல்லேகலை முதலீட்டு வலையத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கம்பியைப்
பயன்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொறி ஒன்றில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுப் பாதுகாப்பான ஓரிடத்தில் அதனை
விடுதலை செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக ரன்தெனிகல வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு
அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற குழுவினர் மேற்படி சிறுத்தைக்கு மயக்க
ஊசி செலுத்தி அதனைப் பொறியில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.
அவசியமான சிகிச்சையை வழங்கி
பின்னர் அந்தச் சிறுத்தையை ரந்தெனிகல பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று
பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.
வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர் அக்கலங்க பினிதிய தலைமையிலான குழுவினரே
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 6 – 7 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த மேற்படி ஆண் சிறுத்தைக்கு
எதுவித உட்காயங்களும் இருக்கவில்லை என்றும், அதன் வெளிக்காயங்களுக்கு
மட்டும் அவசியமான சிகிச்சையை வழங்கி அதனைக் காட்டில் விடுவித்ததாகவும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.