மட்டக்களப்பு (Batticaloa) – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில்
மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது இன்று (3) இடம்பெற்றுள்ளது.
பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்தி பகுதியிலுள்ள விவசாய காணி ஒன்றில்
சட்டவிரோதமான முறையில் காட்டு யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த
மின்சார கம்பியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பு
சம்பவத்தில் முதலைக்குடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின்
தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள்
யானையை விரட்டுவதற்காக சென்று திரும்பி வரும் போது விவசாயி ஒருவர் தனது
காணியில் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த யானை பாதுகாப்பு மின்சார
கம்பியில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு , மற்றுமொருவர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு
செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதம் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக
சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.