மானிப்பாய் பிரதேச சபையின் நிதியில் கொள்வனவு செய்த வீதி விளக்குகளை
பொருத்துவதற்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் வீதி விளக்குகளை பொருத்துபவர்களுக்கு
தமது சொந்த நிதியில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மானிப்பாய்
பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன் கூறிய விடயம் தற்போது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான வினோத் தனு நேற்றையதினம்
சபை கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சபையில் கருத்து தெரிவிக்கையில், “பிரதேச சபையின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வீதி விளக்குகள், ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தலா 10 என்ற வழங்கப்பட்டது.
அந்த வீதி விளக்குகளை பொருத்துவதற்கு ஒவ்வொரு உறுப்பினரும், ஒரு வீதி
விளக்கிற்கு 300 ரூபா வீதம் தமது சொந்த பணத்தில் இருந்து வழங்க வேண்டும் என்று
தவிசாளரால் கூறப்பட்டது.
உறுப்பினர்களிடம் நிதி
நாங்களும் வேறு வழியின்றி அவ்வாறு ஒரு வீதி
விளக்கிற்கு 300 ரூபா வீதம் 10 வீதி விளக்குகள் பொருத்துவதற்கு 3000 ரூபாவினை
வழங்கினோம்.

அந்த கொடுப்பனவு வழங்க முடியாது என்று கூறுகின்ற உறுப்பினர்களின் வட்டாரத்தில்
வீதி விளக்குகள் பொருத்தப்படாது என்ற தவிசாளர் கூறிய நிலையில் வேறு வழியின்றி
எமது சொந்த நிதியில் இருந்து அந்த கொடுப்பவை வழங்கினோம்.
வீதி விளக்குகளை கொள்வனவு செய்யும்போது, அந்த வீதி விளக்குகளை பொருத்துவதற்கு
சபையில் இருந்து நிதி ஒதுக்கியிருக்கலாம் தானே? எதிர்காலத்தில் இது குறித்து சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து ஏனைய உறுப்பினர்களிடம் வினவியபோது, தாங்களும் அவ்வாறு தமது சொந்த
நிதியில் இருந்து கொடுப்பனவை கெடுத்ததாக கூறினர். மேலும் சில உறுப்பினர்கள்
தாங்கள் ஒரு வீதி விளக்கினை பொருத்துவதற்கு இருநூறு ரூபா வீதமே வழங்கியதாக
கூறினர்.
வீதி விளக்குகளை பொருத்துவதற்கு சபையினால் நிதி ஒதுக்காது இவ்வாறு
உறுப்பினர்களின் சொந்த நிதியில் இருந்து கொடுப்பனவை வழங்குமாறு தவிசாளர் கூறிய
விடயம் உறுப்பினர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

