மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக 33 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (04) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்திற்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து
கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள்
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து
குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள் மற்றும் பொது
அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு
புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, மற்றும் பங்கு மக்கள் பங்கேற்கேற்று
தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
பல்வேறு வாசகங்கள்
இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ்
அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம்
அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலர்
கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை
ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக
மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட
பகுதியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.







