தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டு மே தினப் பேரணி ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றது.
இன்று (01) முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி ஊடாக பயணித்து யாழ்.பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.
விடுக்கப்பட்ட கோரிக்கைகள்
குறித்த பேரணியின் போது “தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி“, ”அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு” மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு”, ”கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கு”, ”விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு” உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்தப் பேரணியில், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் (CTU), ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பேரணி ஆரம்பமான வேளை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான காவல்தறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை பேரணியின் நிறைவு இடமான பொது நூலகத்திற்கு முன்பாக கூட்டம் ஒன்றும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.








