மட்டக்களப்பு- வவுணதீவுப் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(20) இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டினுள் பெண் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை உண்பதற்காக காட்டு யானை வந்த போதே பெண்ணை தாக்கியுள்ளது.
உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வயது 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து
மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு
விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்தோடு, வவுணதீவு
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நிதியுதவி
இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின்
அனுமதிக்கமைவாக பிரதேச செயலகத்தினால் யானை தாக்கி இறந்தமைக்காக பத்து இலட்சம்
ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன் முற்பணமாக
மரண சடங்கிற்கு இறந்தவரின் மகனிடம் ஒரு இலட்சம் ரூபா காசேலையினை கிராம
உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தரினால்
வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது.