பெற்றோர் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள்
மேற்கொள்ளப்படுவதாக துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர் அன்னமலர்
சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் பழைய
மாணவர்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும்
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய உடற்கல்வி
ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய பாட வேலைகளில்
பாடங்கள் நடைபெறுவதில்லை என்றும் இங்கு நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளுக்கு
எதிராகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் முன்னெடுப்பு
இந்த நிலையில் பெற்றோர்களின் போராட்டம் நடைபெற்ற சம நேரத்தில் பாடசாலை
மாணவர்களும் அதிபர் அலுவலகம் முன்பாக குறித்த ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து
செய்யுமாறு கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைச் சமரசம் செய்வதற்காக நேற்று வலைய கல்வி திணைக்களத்தில் இருந்து
வந்த உதவி கல்விப் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் குறித்த
பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் நேற்று மாலை வரை போராட்டம்
நடைபெற்றது.
அத்துடன் வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகளும் பாடசாலை அதிபரும் பொலிஸ்
பாதுகாப்புடன் பாடசாலையில் இருந்து வெளியேறி சென்றனர்.
இதன் தொடர் போராட்டமாக நேற்று காலையும் குறித்த போராட்டம் நடைபெற்று வருவதுடன்
மாவணவர்களின் வரவு குறைவாக உள்ளதுடன் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களும்
நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களை தொடர்பு
கொண்டு கேட்டபோது குறித்த பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களுக்கு எதிராக
பெற்றோர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் மாணவர்களால்
வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்துள்ளார்.