தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்
வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டு வரும் நிலையில்
மன்னாரிலும் நினைவு கூரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின
அழிப்பு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூரப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார்
பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த
நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை
நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி
டேவிட்சன் உள்ளடங்கலாக சமூக செயற்பாட்டாளர்கள் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்
என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) காலை 11 மணியளவில் மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்
ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.










