இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை விஜயம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நரேந்திர மோடி இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அனுராதபுரத்தில் உள்ள ஶ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களை ஆரம்பித்து வைப்பார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.