2025 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை (24) கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட காலி முகத்திடல் பகுதிக்கு அதிகளவான மக்களும் வாகனங்களும் வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
விசேட போக்குவரத்து திட்டம்
இதன்போது ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு நகரின் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிறப்பு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
மாற்றுப்பாதைகள் அறிமுகம்
இந்த பொலிஸ் பிரிவுகளில் முடிந்த வரை சாதாரண போக்குவரத்து பயன்பாடு பராமரிக்கப்படும். நெரிசல் அதிகமாகும்போது மட்டுமே மாற்றுப்பாதைகள் அறிமுகப்படுத்தப்படும்.
பண்டிகை கொண்டாட்டங்களின்போது போக்குவரத்து தடைகளை எளிதாக்குவதையும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காலி வீதி மற்றும் காலி முகத்திடல் பகுதி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் நியமிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் உள்வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் தேவைப்படும்போது சுற்றுவளைவு வழி நோக்கி திருப்பிவிடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதிகளில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளதோடு, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச மற்றும் கட்டண வாகன நிறுத்துமிடங்கள்
கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக, கொழும்பு முழுவதும் கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மருதானை மற்றும் கருவாத்தோட்டம் உள்ளிட்ட பல இடங்கள் இலவச மற்றும் கட்டண வாகன நிறுத்துமிடங்களை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பணியில் உள்ள அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து ஏற்பாடுகளை விளம்பரப்படுத்த உதவவேண்டும் என்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டமானது நாளை 24ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

