யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும்
அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (17) மாநகர சபை முதல்வர்
மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்கம்
குறித்த பழைய பூங்கா பகுதியில் ஒரு கட்டடம் அமைவது தொடர்பில் நீதிமன்றில்
வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் நாட்டின் சட்டத்திற்கும் நீதிமன்றிற்கும்
மதிப்பளிக்கின்றோம் என தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பத்து உறுப்பினர்களும்
சபையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர் இ.தயாளன் சிங்கள
மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு
அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றை சபையில் முன்வைத்தார்.

குறித்த கருத்தினை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக
ஏற்றுக்கொண்டனர்.
அத்தோடு சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய அனைத்து கட்சி உறுப்பினர்களும்
பிரேரணைக்கு தமது ஆதரவினை தெரிவித்ததை அடுத்து சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

