இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை 100 வீதம் சரியாக நடைபெறவில்லை என விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்கும் சில விடயங்களில், 100 சதவீதம் முழுமையாகவே வேலை நடைபெறுகிறது என தம்மால் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
எனினும், இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அளவிற்கு எந்தவொரு கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபா வழங்கும் பணிகள் தற்போது நிறைவடையும் கட்டத்தில் உள்ளதாகவும், ஆனால் ரூ.50,000 நிவாரணத் தொகையை வழங்கும் போது சில சிக்கல்கள் எழலாம்; அது இயல்பான விடயமே எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் வழங்குவதற்கான 50,000 ரூபா நிவாரணத் தொகை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், சிலருக்கு அந்தத் தொகையை வழங்க வேண்டுமா என்ற கேள்வியும் உருவாகின்றதாகவும் அவர் கூறினார்.
சிலர், அரச அதிகாரிகளுக்கு அனர்த்தம் ஏற்படவில்லை; தங்களுக்கு மட்டுமே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்ற மனநிலையுடன் சிந்திப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இந்த பாதிப்பு பொதுவாக அனைவரையும் பாதித்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இந்த வேலை 100 சதவீதம் முழுமையாகவும் பூரணமாகவும் நடைபெறுகிறது என்று கூற நான் தயாரில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.

