கவீந்திரன் கோடீஸ்வரன் அழைப்பு
பொதுமக்கள் அனைவரும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்
என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்
கோடீஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்பாறை – காரைதீவு பகுதியில்
நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

செய்தி – சிஹான் பாரூக்
சபாரத்தினம் சிவயோகநாதன் எதிர்ப்பு
சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட
கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதாக மட்டக்களப்பு
மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம்
சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் கொண்டுவரும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் பின்னால் சதித்திட்டங்கள்
தமிழ் தேசிய நீக்கம் என்பது இருக்கும் என்பது உண்மை.
நீதியை இலங்கை அரசிடமே கேட்டு இந்த கடையடைப்பு போராட்டத்துக்கான அழைப்பு
விடுக்கப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகள்,
சிவில் சமூகங்கள் ஆகிய இணைந்து ஐ.நாவை நோக்கி அறிக்கைகளை, எழுதுவதுடன்
போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இந்த கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது உள்ளக பொறிமுறையை
வலுப்படுத்துவதாகவும் அதனை ஏற்றுக்கொள்வதாகவுமே அமையும். கடையை அடைப்பதன்
மூலம் உலகப் பொதுமுறையை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்
என்பதை வெளியில் காட்டுவதே அவரது நோக்கம்.
சர்வதேச பொறிமுறைக்கு ஊடாக நீதி வேண்டும் என்று நாங்கள் வேண்டி நிற்கின்றபோது
அந்த பொறிமுறையை ஒரு மடைமாற்றும் செயலாகவே இந்த கடையடைப்பு போராட்டத்தை நாங்கள்
பார்க்கின்றோம்.
கடந்த கால வரலாற்றை பார்க்கின்ற போது தமிழ் இனத்துக்கு எதிரான பலவிதமான
காரியங்களை முன் நின்று செயல்படுத்தியவர் இந்த சுமந்திரன்.

எனவே சுமந்திரன்
கொண்டு வருகின்ற எந்த ஒரு விடயத்திலும் எமக்கு எள்ளளவும் நம்பிக்கையும் இல்லை.
கடை உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் சுமந்திரனின் விருப்பத்திற்குரியவர்கள்
அல்ல. அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு வழங்குகின்றவர்களும் வர்த்தகத்தில்
ஈடுபடுகின்றனர்.
இப்படியாக இருக்கும்போது அனைத்து கட்சிகள், சிவில் சமூகங்கள்,
பொது அமைப்புகள் அனைத்துடனும் கதைத்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும்.
தமது கட்சிக்குள் எடுக்கின்ற முடிவுகள் போல் வடக்கு – கிழக்கு பகுதிகளில்
வசிக்கின்ற மக்கள் அனைவரையும் ஒரு வாய் வார்த்தையால் ஸ்தம்பிதம் அடைய வைக்க
முடியும் என நினைப்பது அவரது முட்டாள்தனம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தி – கஜி
கடையடைப்பு போராட்ட அழைப்பு
வடக்கு, கிழக்கில் அத்துமீறல்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்ட அழைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை
தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரித்தார்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மாலை அவரது இல்லத்தில்
நடைபெற்றது. அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கான 60வது கூட்டத்தொடர்
ஆரம்பிக்க இருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை
பேரவையில் மனித உரிமை ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம்
செய்திருக்கின்றார்.

செம்மணி புதைகுழிக்கும் சென்று அங்கு அகழ்ந்து
எடுக்கப்படுகின்ற எலும்பு கூடுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அணையா விளக்கு
என்கின்ற மக்களின் அந்த போராட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டு
சென்றிருக்கின்றார்.
தற்போது அவர் ஒரு ஆரம்ப அறிக்கையை கொடுத்து இருக்கின்றார் இந்த அறிக்கையில்
கூறப்பட்டிருக்கின்ற விடயம் என்னவென்றால் அதாவது இறுதி யுத்தத்தின் போது
ஏற்பட்ட பாதிப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவரது அறிக்கையில்
சொல்லப்பட்டிருக்கின்ற விடயம் அதாவது உள்நாட்டு பொறிமுறை மூலமாக இந்த
விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கருத்தினை கூறி இருக்கின்றார்.
இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் உண்மையில் 10 ஆண்டுகளுக்கு
மேலாக இந்த உள்நாட்டு பொறிமுறையை பயன்படுத்தி பொறுப்பு கூறலை செய்ய வேண்டும்
அதன் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் நீதி பரிகாரத்தை வழங்க வேண்டும்.
அது மாத்திரமில்லாத இனியும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கான ஒரு
உருப்படியான தீர்வை காண வேண்டும் என்கின்ற விடயம் சொல்லப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும் யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த அரசாங்கம் மைத்திரி அரசாங்கம்
அதன் பின்னர் கோத்தா அரசாங்கம் அடுத்ததாக ரணில் அரசாங்கம் என்று நான்கு
அரசாங்கங்கள் வந்திருக்கின்றது தற்போது அனுர அரசாங்கம் வந்திருக்கின்றது.
கடந்த
நான்கு அரசாங்கங்களும் இந்த உள்நாட்டு பொறிமுறையை உருப்படியாக
பயன்படுத்தவில்லை.
படுகொலை செய்யப்பட்டவர்களின் விடயமாக இருந்தாலும் சரி காணாமல் ஆக்கப்பட்ட
மக்களின் விடயமாக இருந்தாலும் சரி எதுவும் செய்யவில்லை. தற்போது அனுர அரசு
புதிதாக வந்திருப்பதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர்
உள்நாட்டு பொதுமுறையை இந்த அரசாங்கம் பயன்படுத்தலாம் என்கின்ற அர்த்தப்பட அவர்
கூறியிருக்கின்றார்.
ஆனால் எங்களுக்கு கடந்த நான்கு அரசாங்கங்கள் இவற்றை
செய்யவில்லை எங்கே இருக்கின்ற முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த இறுதி
யுத்த காலத்தை பற்றி கூறுகின்ற போது மூன்று தரப்புகள் காணப்படுகின்றனர்
பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்கள், பாதிப்பை ஏற்படுத்திய படையினர், இந்த
படையினரை வழிநடத்திய சிங்கள அதிகார மையம் இந்த மூன்றையும் நாங்கள்
பார்க்கின்றோம்.

இங்கு பார்க்கின்றபோது பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் இனத்தவர்களாக
இருக்கின்றார்கள் பாதிப்பை ஏற்படுத்திய படையினர் சிங்கள இனத்தவர்களாக
இருக்கின்றார்கள் அவர்களை வழிநடத்துகின்ற அரசாங்க மையம் சிங்கள அரசாங்கமாக
இருக்கின்றது இந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் பாதிப்பை
ஏற்படுத்தியவர்களை வழிநடத்தியவர்களும் ஒரு இனத்தை சேர்ந்தவர்களாக பெரும்பான்மை
இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்
இனத்தவர்களாக இருக்கின்றார்கள்.
இந்த இடத்தில் உண்மையில் தமிழ் இனத்தவர்களுக்கு கடந்த சுதந்திரம் அடைந்த 48
ஆம் ஆண்டில் இருந்தது கிட்டத்தட்ட 77 வருடங்களாக இந்த அரசாங்கத்தாலும் சரி,
படையினராலும் சரி, அல்லது குண்டர்களாலும் சரி பல பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு
வந்திருக்கின்றது அந்த பாதிப்புகளுக்கான பரிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
அவ்வாறு இருக்கின்ற போது இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர்
அவர்களது கருத்தினை நாங்கள் மதிக்கின்றோம் ஆனால் கடந்த காலங்களில் இந்த
உள்நாட்டு ஒருமுறை வலுவிழந்து இருக்கின்றது அல்லது அதன் மூலமாக தீர்வு
எதனையும் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது இதுதான் கற்று அறிந்த ஒரு பாடமாக
இருக்கின்றது.
செய்தி – குமார்
செல்வம் அடைக்கலநாதன்
இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும்
கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை
எடுத்திருக்க வேண்டும், மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும், எனினும்
முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ
பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய
நாம் ஆதரவளிக்கின்றோம் என டெலோ தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (17) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும்
அரங்கேற்றப்பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை
வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும்
அதிகூடிய தேவையற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும்.
2009 போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழ விடக்கூடாது
என்கிற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாக நாம் கருதுகின்றோம்.
அன்றைய காலத்தில் எம்மினத்தின் மீது பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட
அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு
கிழக்கில் இருந்து ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக
அகற்ற பொது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவதன்
ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும், மண்ணையும்
காத்திட தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம்.
இன்றைய சூழ்நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதிக இராணுவ பிரசன்னம் அதன்
அடக்குமுறை இன அழிப்பு வடிவங்காரும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை
கேள்விக்குரியக்குகின்றது.
அந்தவகையிலேயே 18/08/2025ம் திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால்
முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தலுவிய இராணுவ பிரகன்ணத்திற்கு எதிரான
போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆதரவாளிக்கின்றது.
இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும்
கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.
மாறாக தன்னிச்சையாக எடுத்த
முடிவு தவறாகும்.
இருந்த போதிலும் இனத்தின் அடிமை விலங்கொடிக்க ராணுவம் உள்ளிட்ட
முப்படைகளின் பிரசன்னத்தை எமது தாயக பூமியான வடக்கு கிழக்கில் இருந்து
முற்றாக அகற்ற வேண்டும்.
அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்ற உயரிய நோக்கில்
முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்திய வர்கள் என்ற வகையில் ராணுவ
பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் “ரெலோ” ஆகிய
நாம் ஆதரவளிக் கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

