தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்படுவது கவலையளிக்கின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) நாடாளுமன்றத்தில் இன்று (09) எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்தமைக்கே இவ்வாறு கொச்சைப்படுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ”எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு தெளிவாக விளக்கமளித்தேன்.
மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி
ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சைப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.
நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.
தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்” என தெரிவித்தார்.