சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தின்
நிர்வாகம் மற்றும் சம்பள மறுசீரமைப்பு தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து, நாடாளுமன்ற ஊழியர்கள் வரவு செலவுத் திட்ட அமர்வு நடைபெறும்
முக்கியமான காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி
வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள ஒன்பது திணைக்களங்களும் ஏற்கனவே சபாநாயகரிடம் தமது
எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், இந்தத் துறைகளில் பணிபுரியும் சுமார் 850
ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலைநிறுத்தம் செய்வது என முறைசாரா அளவில்
உடன்பட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட விவாதம்
நாடாளுமன்ற அனுபவம் இல்லாதவர்களால் முழுமையான விபரங்களைத் தெரிந்துகொள்ளாமல்
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நடைமுறைப்படுத்தப்பட்டால்
தங்களுக்குக் கடுமையான அநீதி இழைக்கப்படும் என்றும் ஊழியர்கள் வாதிடுகின்றனர்.

எனவே, வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் முக்கியக் காலத்திலேயே இந்த
எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசித்து
வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

