சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன்,
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில்
இடம்பெற்றது.
குறித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவர் நடமாடியதை அவதானித்து அவரை மறித்து சோதித்த போது அவரது காற்சட்டை பொக்கற்றில் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள், பென்ரன்கள், இருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவை சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகள் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒருதொகைப் பணம் இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார், சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொறுமதிமிக்க பொருட்களையும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் கையளித்துள்ளனர்.
திருட்டுச் சம்பவங்கள்
இதனையடுத்து, சுன்னாகம் பொலிஸார் சந்தேக நபரை தமது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த நகைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து திருட்டுக் சம்பவங்களுடன் தொடர்புடைய விசாரணைகளில் பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளது.