ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், அலிசன் ஹூக்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11.12.2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில் இதன்போது துணைச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பேரிடரை நிலைமையில் உதவி வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அலிசன் ஹூக்கர், பேரிடரில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு நன்றி
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் இந்த கடினமான நேரத்தில் பல்வேறு நிவாரணக் குழுக்களை நாட்டிற்கு அனுப்புவதில் அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுர, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு அளித்த மனமார்ந்த ஆதரவைப் பாராட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் நிலைபெற்று, பொருளாதார குறிகாட்டிகள் மேம்பட்டு வரும் நேரத்தில், இலங்கை இந்த பேரழிவை எதிர்கொண்டதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நீண்டகால அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆதரவு வழங்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் இதன்போது தெரிவித்திருந்தார்.
போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

