தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் திறன்களைக் கைதிகளுக்கு வழங்குவதன்
மூலம், சிறைக் கைதிகளும் மனிதர்கள் என்ற யதார்த்தத்தை உருவாக்க முடியும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்காகவே சிறை கைதிகளுக்கு அரசாங்கம் தொழில் பயிற்சி சான்றிதழ்களை
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை சிறைச்சாலை மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய பயிலுனர் அதிகார சபை
ஆகியவற்றுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (4)மேற்கொண்ட பிரதி அமைச்சர்,
அங்கு சிறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலே, இவ்வாறு தெரிவித்தார்.
சிறை கைதிகளுக்கான மறுவாழ்வு
பிரதி அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,
சிறை கைதிகளுக்கான, மறுவாழ்வு என்பது கருணை அடிப்படையில் ஏற்படுத்தப்பட
வேண்டும். இதன் மூலமே, தாங்கள் சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற
சிறைக் கைதிகளின் மனநிலையை மாற்றி, அவர்களை ஒரு சமூகப் பிரசையாக வாழ வைக்க
முடியும்.
சிறைவாசம் என்பது ஒரு வாழ்க்கைக் கதையின் முடிவாக இருக்கக்கூடாது, அது ஒரு
புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இதனை உருவாக்க வேண்டும்
என்றால், இவர்களுக்கு வாழ்வதற்கான தேர்ச்சிகளையும் ஆற்றலையும் வழங்க வேண்டும்.
இதற்காகவே, சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை,
அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.
ஏதாவது ஒரு தொழில்துறையில், ஆற்றலைப் பெறுகின்ற போது, தானும் ஒரு சமூக
அந்தஸ்து உள்ளவன் என்ற மனநிலை, ஒவ்வொரு சிறை கைதிகளுக்கும் ஏற்படுகின்றது.
அரசாங்கம் முன்னெடுக்கின்ற இந்த வேலை திட்டத்தை, வெற்றி பெறச் செய்வதற்கு
கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். அரச அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள்
மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் அதிகாரிகள் அனைவரும் இணைந்து, இதனுடைய
வெற்றிக்காக பாடுபட வேண்டும்.
எனவே, அரச ஊழியர் என்ற வகையில், தங்களுடைய
பொறுப்புகளை உணர்வுடன், மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
கண்காணிப்பு நடவடிக்கை
இதன் போது, தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட, NVQ – 3
சான்றிதழ் பயிற்சி நெறிக்காக, தச்சு தொழில் பயிற்சி, மின்னியல் தொழில்பயிற்சி
மற்றும் தையல் தொழிற்பயிற்சி ஆகியவற்றை பிரதி அமைச்சர் இங்கு ஆரம்பித்து
வைத்து, சிறை கைதிகளுக்கு பயிற்சி நெறிக்கான நாட்குறிப்பேடுகளையும் வழங்கி
வைத்தார்.
இதன் மூலம் சிலை கைதிகள் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெறுவதற்கான வசதிகள்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிகழ்வில், சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர், சிறைச்சாலை நலச் நலன்புரிச்
சங்க தலைவர் மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் உள்ளிட்ட
பலர் இதில் கலந்து கொண்டனர்.
தேசிய பயனர் அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்திற்கு விஜயம் செய்த பிரதி
அமைச்சர், அங்குள்ள வகுப்பறைகளை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்
குறை நிறைகளை ஆராய்ந்து ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.