ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும்
மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு
காணவேண்டும் என கோரியே இந்தப் போராட்டம் நேற்று (28.10.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355
காணப்படுகின்ற போதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது.
கோரிக்கை
அத்துடன், பல்கலைக்கழக சுற்றுநிருபத்திற்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும்
ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு
எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும்
பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை
புறக்கணிக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள்
தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்
எனவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்
எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோர்
போராட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




