காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர்கள் அண்மைய நாட்களில் கொல்லப்பட்ட சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(Bar Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த போது கணேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொதுமக்களின் நம்பிக்கை
இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கடந்த 21 ஆம் திகதி காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களால் சட்ட அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதால் அவற்றைத் தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.