பிழையான முறையில் பெறுகின்ற நிவாரணம் பிரயோசனமாக அமையாது எனவே நிவாரணத்துக்கு கோரிக்கை வைப்பவர்கள் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்பு குறைவு எனவே எங்களை விட மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர்.

அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நாங்கள் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் உயிரிழந்ததுடன் 11 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது டன் 1946 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அனர்த்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நேற்று மாலை வரை 6 ஆயிரத்து 238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த கால அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து முகாம்கள் அல்லது உறவினர் வீடுகளில் தங்கிய இருந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது.
நிவாரணம்
கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர் ஆனால் தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அதேவேளை பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் தொழில் முயற்சியாளர், சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடக்கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதைப் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை பாதிப்பு யாருக்கும் ஏற்படும் இருந்தபோதும் பிழையான முறையில் பெறுகின்ற நிவாரணம் பிரயோசனமாக அமையாது எனவே நிவாரணத்துக்கு கோரிக்கை வைப்பவர்கள் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

