இலங்கையில் (Sri Lanka) எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் இன்று (18) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பம் தொடர்பான நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

