இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ராஞ்ச் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 டிசம்பரில் கடல் மார்க்கமாக இலங்கையை அடைந்த 116 ரோஹிங்கியா மக்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, அப்போதிலிருந்து முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை மீட்டும், தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் நன்றி தெரிவித்த அவர், ஐ.நா. அகதிகளுக்கான ஆணைக்குழு (UNHCR) இந்தக் குழுவினரை பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிலையான தீர்வுகளுக்கு தடை
இது தொடர்பான நீண்டகால ஒப்பந்தம் இலங்கை அரசுடன் உள்ளதையும், அதன் அடிப்படையில் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃப்ராஞ்ச் மேலும் தெரிவித்ததாவது: “UNHCR தொடர்ந்து பதிவு செய்யும் முன்மொழிவை வைத்திருக்கும் நிலையில், அந்தப் பதிவு நடந்தால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை செய்யப்படலாம்.
நீண்டகால தடுத்து வைப்புகள் அவர்கள் அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் விதமாகவும், நிலையான தீர்வுகளை அடைவதற்கு தடையாகவும் அமைகிறது” எனக் கூறியுள்ளார்.
Source: https://ibctamil.com/article/rohingya-refugees-in-sri-lanka-un-raises-concerns-1756373555

