வடமத்திய மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சையின் 10 ஆம் தர விஞ்ஞானம் மற்றும் தகவல் தொடர்பாடல் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக மேலதிக பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கே கிடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர்களின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (08) வடமத்திய பாடசாலைகளின் 10 ஆம் தர மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்றதுடன் தகவல் மற்றும் தொடர்பாடல் பரீட்சை இன்று (09) நடைபெற்றுள்ளது.
கல்வி திணைக்களத்தில் முறைப்பாடு
ஆனால் இப் பரீட்சையை நடத்துவதற்கு முன்னர் பொலன்னறுவை மற்றும் ஹிகுராங்கொட ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் மேற்படி இரண்டு வினாத்தாள்களையும் தமது பயிற்சி வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கொடுத்து விடைகளை எழுதியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு வினாத்தாள்களும் பரீட்சைக்கு முன்னர் துணை வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் கைகளில் இருந்ததை தமக்குக் கிடைத்த தகவலின் மூலம் உறுதிப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தவிசாளர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, சம்பவம் குறித்து வடமத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் பரீட்சைகள் பணிப்பாளரிடம் ஆதாரங்களுடன் நேற்று (09) முறைப்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/second-term-question-papers-leaked-ahead-of-exams-1728496802

