இலங்கையில் பணவீக்கம் உயர்ந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாய நிலை உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்–ஈரான் மோதல் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவடைதல் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்தை பெரிதும் சிக்கலாக்கி வருவதாக பெஸ்ட் கெப்பிடல் ரிசர்ச் First Capital Research என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறக்குமதிகளில் கப்பல் கட்டணம்
உலக எண்ணெய் விலை உயர்வும், டொலரின் வலிமையும், இராணுவ மோதல்களின் தீவிரமும் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவுகளை உயர்த்தி, ரூபாயின் மதிப்பை மேலும் குன்றவைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய நாள்களில் உள்நாட்டு எரிபொருள், போக்குவரத்து, உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
குறுகிய காலத்தில் 0.5% முதல் 1.2% வரை விலை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆகஸ்டில் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 4%–5% ஆக உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி, தொழிற்துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் எரிபொருள் விலை உயர்வு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன், உணவு, மருந்துகள், உரங்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளில் கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதி செலவுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க டொலர் வலுவடைதல்
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றின் விலையும் உயரும் நிலையில், இந்த செலவுகள் நுகர்வோர்கள் மீது சுமத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் மாத ஆரம்பத்தில் டொலரின் பெறுமதி 300 ரூபாவாக காணப்பட்டது, எனினும் ஜூன் நடுப்பகுதியில் டொலரின் பெறுமதி சுமார் 305 ரூபாவா உயர்வடைந்துள்ளது.
இது அவசர நிலை நிதிப் பாதுகாப்புகளை கடுமையாக்கும் என First Capital எச்சரிக்கிறது.
அமெரிக்க டொலர் வலுவடைதல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பணப்பரிமாற்றங்கள் (Remittances), இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இஸ்ரேலுக்கு வேலைக்காக செல்வதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அங்கு 20,000 இலங்கையர்கள், பெரும்பாலும் பராமரிப்பு மற்றும் கட்டடத் துறையில் பணியாற்றுகின்றனர்.