அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (13) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான உதவிகள்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தேவையான உதவிகள், உபகரணங்கள் மற்றும் பண நன்கொடைகள் பலரிடம் இருந்தும் கிடைப்பதாகக் குறிப்பிட்ட செயலாளர், இந்த ஒத்துழைப்பை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரண பொறிமுறை சிறப்பாகச் செயற்படுவதாகவும் அதன் காரணமாக பொதுமக்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்பாடலைப் பேணுவதற்காக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் நூறு ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

