மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அமைதியின்மை உச்சத்தை எட்டியுள்ளது, அடுத்த சில நாட்களில் இஸ்ரேலை(israel) குறிவைத்து எதிர்பாராத தாக்குதல் நடக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனவே இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள்(sri lanka) தங்களின் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார(Nimal Bandara) அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பல ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை அனைத்தையும் ஒடுக்குவதில் இஸ்ரேல் படைகள் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.
தேவையான பொருட்களை சேமித்து வைக்க அறிவுறுத்து
அவசர காலங்களில், மருந்து பயன்படுத்துபவர்கள் தேவையான அளவு மருந்துகளை வைத்திருக்கவும், மற்றும் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களை பயன்படுத்தவும், சில நாட்களுக்குத் தேவையான அனைத்து உணவு மற்றும் குடிநீரையும் சேமித்து வைக்கவும், அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜிபிஎஸ் மற்றும் தொலைபேசி இணைப்புகள் அவ்வப்போது தடைப்படலாம், எனவே இணைப்புகளை மீட்டெடுக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் இஸ்ரேல் அரசு
எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இஸ்ரேல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளை தயார் செய்துள்ளதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் தயாராகி வருவதாகவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

உருவாகி வரும் இந்த நிலை குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும், ஏதேனும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டால், தூதரகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

